Sunday, December 28, 2008

இலங்கை தமிழர்களுக்காக உயிரையும் துறக்க தயார்: கலைஞர் கருணாநிதி

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு இனியும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கு தீர்வு காண்பதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை.
மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது. அவர்களை புறம் தள்ளி இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்போம். இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம். தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்றார்.
எனவே ஏற்கனவே நானும் மற்றைய கட்சி தலைவர்களும் சந்தித்தபோது அளித்த உறுதிமொழியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மத்திய அரசு இதற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன். இது விஷயமாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிட்ட போது அவர் எங்களுக்கு தந்த வாக்குறுதி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அந்த வாக்குறுதியை வலியுறுத்தியே இங்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்குழு தீர்மானத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதனை நிறைவேற்றி தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. அந்த வரிசையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை களையும் சாதனையையும் செய்து முடிக்க வேண்டும். அங்கே தமிழர்கள் அன்றாடம் உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த குறுக்கு வழியில் மத்திய அரசை மிரட்ட நாம் விரும்பவில்லை. என்னுடைய நிலையை, திமுகவின் நிலையை, தமிழக மக்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்திலே விளக்கியிருக்கிறேன். இலங்கை தமிழர் பிரச்சனையில் இளம் தலைவர் ராஜீவ்காந்தியின் மறைவுக்கு பிறகு; மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டுமென்று நான் கூறி இருக்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடைய புண்ணுக்கு மருந்து போட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்று நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். இதற்காக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிக மிக பணிவாகவும், மிக மிக உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்காக வாதாடுவதை சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லி வக்கிரப் புத்தியுடன் நடந்து கொள்கிறார்கள்.
இதன் பிறகாவது மத்திய அரசு மனம் இறங்கி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதனையே முக்கிய தீர்மானமாக கருதி மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி. தீர்மானங்கள்
முன்னதாக, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துவதற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதிபடி பிரணாப் முகர்ஜியை விரைந்து அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் முதல்வரை சந்தித்து பேசியதை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை புதிய பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலி ஆதரவுடன் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments: