Sunday, December 28, 2008

ஒரு வயது குழந்தையை அரவணைத்து பராமரித்த பூனைகள்

ஒரு வயதுடைய ஆண் குழந்தையொன்று பூனைகளால் பராமரிக்கப்பட்டு வந்த விசித்திர சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுள்ளது.

பெண் பொலிஸ் உத்தியோகத்தரான அலிசியா லோரெனா லின்ட்விஸ்ட், கிரிஸ்ட்கிங் மாவட்டத்திலுள்ள கால்வாய் ஒன்றில் பூனைகளால் குழந்தையொன்று பராமரிக்கப்பட்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட விசித்திர அனுபவம் குறித்து அலிசியா விபரிக்கையில், "நான் நடந்து சென்ற போது, பூனைக் கூட்டமொன்று மிகவும் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். வழமைக்கு மாறான அந்த நிகழ்ச்சி என் கவனத்தைக் கவர பூனைகளுக்கு அருகில் சென்றேன்.

என்னால் என் கண்களை நம்பவே முடியவில்லை. பூனைகளின் மத்தியில் ஆண் குழந்தை ஒன்று படுத்திருந்தது. மிகவும் அழுக்காக இருந்த அந்தக் குழந்தையை, பூனைகள் நாக்கால் நக்கி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தன.

நான் குழந்தையை நெருங்கவும் பூனைகள் குழந்தையைப் பாதுகாக்கும் வகையில் என்னை நோக்கிச் சீறின. நான் செய்வதறியாது சிறிது பின்வாங்கினேன். பூனைகள், குழந்தை குளிரால் பாதிக்கப்படாத வண்ணம் குழந்தையின் மேல் அரவணைப்பாக படுத்தன. குழந்தை தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தது.

நான் சில உணவுத் துண்டுகளை வீசி பூனைகளின் கவனத்தை திசை திருப்பினேன். பின் குழந்தையை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றேன். அங்கிருந்து குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது'' என்று கூறினார்.

பூனைகள் மட்டும் உரியபடி பராமரிக்கத் தவறியிருந்தால் குழந்தை உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வீடு வாசல் இன்றி வீதியோரம் வசிப்பவரான குழந்தையின் தந்தையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பல நாட்களுக்கு முன்பு தனது குழந்தை காணாமல் போனதாக அவர் கூறினார்.

0 comments: