Sunday, February 8, 2009

அமெரிக்காவில் சிறிலங்கா நடத்திய களியாட்ட விருந்து முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் சிறிலங்கா தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர நாள் களியாட்ட விருந்து முன்றலில் அமெரிக்கத் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு மற்றும் இந்திய இராஜதந்திரிகளின் கவனத்தை ஈர்ப்பதே தமது நோக்கம் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகம், தனது நாட்டின் 61 ஆவது சுதந்திர நாளினை முன்னிட்டு களியாட்ட விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது.
தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஏராளமான வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த விருந்து நடைபெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் வாயிலில் நூற்றுக்கணக்கான அமெரிக்கத் தமிழர்கள் கூடி பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
விருந்திற்கு வருகை தந்த எல்லோருமே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கடந்தே சென்றனர்.
"சிறிலங்காவுக்கு எதிராக நாம் போராடுகின்றோம்: அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய தேவை எதுவும் எமக்கு இல்லை. ஆனால், அந்த விருந்திற்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கவனத்தை ஈர்ப்பதும், எவ்வாறான ஒரு இனப்படுகொலை செய்யும் நாட்டுடன் அவர்கள் சகவாசம் வைத்துள்ளார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதுமே எமது நோக்கம்" என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளளர்களில் ஒருவர் "புதினம்" செய்தியாளிடம் தெரிவித்தார். "இந்த அர்ப்பாட்டத்தில் நாம் யாரையாவது கண்டித்திருந்தால், அது அங்கு வந்த இந்திய அதிகாரிகளைத்தான். ஏனெனில், இந்தியா தான் தமிழினப் படுகொலைக்குத் துணை போகின்றது" எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments: